×

போலீஸ் கணவரை கொல்வதற்கு முன் அதிக மது ஊற்றி தன்னை புகழவைத்து வீடியோ எடுத்த மனைவி: இணையதளங்களில் வைரல்

திருமலை: தகாத உறவுக்கு இடையூறாக இருக்கும் போலீஸ்காரரை அவரது மனைவி கொலை செய்வதற்கு முன்பாக அவருக்கு பிடித்த அசைவ உணவுகளை சமைத்து பரிமாறி அதிகளவு மது ஊற்றிக்கொடுத்து, தன்னை பாராட்டும் வகையில் பேசவைத்து வீடியோ எடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35), போலீஸ்காரர். இவரது மனைவி ஷிவானி (30). தம்பதிக்கு 8 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஷிவானிக்கும் ரமேஷின் நண்பர் ராமாராவ் (33) என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இதையறிந்த ரமேஷ், மனைவி மற்றும் ராமாராவை கண்டித்துள்ளார்.

இதனால் அவரை கடந்த 1ம்தேதி அதிக மது ஊற்றி கொடுத்து பின்னர் காதலன் மற்றும் அவரது நண்பர் நீலா ஆகியோரை வரவழைத்து ஷிவானி தலையணையால் அமுக்கி கொலை செய்தார். மறுநாள் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஷிவானி நாடகமாடினார். இதுகுறித்து என்.வி.பி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்தனர். பின்னர் ஷிவானி, ராமாராவ் மற்றும் நீலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் தனது கணவரை கொலை செய்வதற்கு முன்பு ஷிவானி எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் தனது கணவரை கொலை செய்வதற்கு முன்பு அவருக்கு பிடித்த மட்டன் குழம்பு, மட்டன் தொக்கு ஆகியவற்றை சமைத்து ஷிவானி பரிமாறியுள்ளார். பின்னர் அதிக மது குடிக்க வைத்துள்ளார். அப்போது தன்னை புகழ்ந்து பேசும்படி கூறி வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் போலீஸ்காரர் ரமேஷ் அதிக மதுபோதையில் பேசுகையில், எனது மனைவி மிகவும் தெளிவானவள். போதிய படிப்பறிவு இல்லாவிட்டாலும் வழிகாட்டினால் போதும், சிறப்பாக செயல்படக்கூடியவள், என் மனைவியே எனது வாழ்கை. நான் இருக்கும் வரை தைரியமாக இருப்பாள். நான் இறந்தாலும் அவள் தைரியமாக இருக்கவேண்டும். என் மனைவிதான் பெஸ்ட். இவ்வாறு ரமேசை ஷிவானி பேச வைத்துள்ளார்.

அதன்பின்னர் ரமேஷை படுக்கை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்துள்ளார். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. அதன் பின்னரே கொலை நடந்திருக்கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், தனது கணவரை கொலை செய்யும் நோக்கில்தான் ஷிவானி இந்த வீடியோ எடுத்திருக்கிறார். தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது எனக்கருதி எடுத்த வீடியோ, அவர் செய்த கொலைக்கு மேலும் ஆதாரமாக உள்ளது என்றனர்.

The post போலீஸ் கணவரை கொல்வதற்கு முன் அதிக மது ஊற்றி தன்னை புகழவைத்து வீடியோ எடுத்த மனைவி: இணையதளங்களில் வைரல் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,
× RELATED வெடிகுண்டுகள், கத்தி உள்பட பயங்கர...